

விருதுநகர்,
மத்திய அரசின் நேரடி வரிகள் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வருமானவரி செலுத்துவோரின் சிரமத்தை குறைக்க வரி கணக்கு தாக்கலில் புதிய சலுகைகள் வழங்கப்படுகிறது. கடந்த 2019-2020 நிதி ஆண்டிற்கான வருமானவரி கணக்கு தாக்கலின் வரி சலுகை கணக்கீட்டிற்கான காலத்தை மார்ச் 31-ந் தேதிக்கு பதிலாக ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஏப்ரல் முதல் ஜூன் 30-ந் தேதி வரை வருமான வரிச்சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சலுகைகளை கணக்கீட்டு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
வாய்ப்பு
மேலும் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வருமான வரி வரம்பிற்கு கீழ் உள்ளவர்கள் அதிகம் செலவு செய்பவர்களாக இருந்தால் அவர்களும் வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு ரூ.2 லட்சம் செலவு செய்து இருந்தாலோ, ரூ.1 கோடி வங்கி கணக்கில் இருப்பு வைத்து இருந்தாலோ, ரூ.1 லட்சம் மின் கட்டணம் செலுத்தி இருந்தாலோ அவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வரி கணக்கை தாக்கல் செய்ய நவம்பர் 30-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.