திம்மாம்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு 3 மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

திம்மாம்பேட்டை போலீசில் புகார் அளித்து 4 மாதமாகியும் நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் நிலையம் முன்பு 3 மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திம்மாம்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு 3 மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சி
Published on

வாணியம்பாடி,

நாட்டறம்பள்ளி அருகே சொரக்காயல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார் (வயது 45), விவசாயி. இவரது மனைவி அமிர்தசெல்வி (38). அதே கிராமத்தில் ஜெயகுமாரின் சகோதரர்கள் ராமச்சந்திரன் (43), பாண்டியன் (40) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது.

நிலம் பிரிப்பது தொடர்பாக சகோதரர்களுக்குள்ளேயே தகராறு நிலவி வந்த நிலையில் ஜெயகுமாரையும், அவரது மனைவி அமிர்தசெல்வியையும் ராமச்சந்திரனின் மனைவி ஜெயபிரியா (36) கடந்த மார்ச் மாதம் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த கணவன் - மனைவி இருவரும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது ஜெயபிரியாவின் தந்தை சாமுடி (55), ஜெயகுமாரின் மகள்கள் அஸ்வினி (10), பொற்செல்வி (12), காவியா (7) ஆகிய 3 பேருக்கும் சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து சாப்பிட வைத்துள்ளார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் 3 பேரும் நலமுடன் வீடு திரும்பினார்கள். இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து 4 மாதமாகியும் சாமுடி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயகுமாரின் சகோதரர்கள் ராமச்சந்திரன், பாண்டியன் ஆகியோர் 15-க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் ஜெயகுமாரின் வீட்டிற்கு சென்று ஜெயகுமாரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஜெயகுமார் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அமிர்தசெல்வி நியாயம் கிடைக்காததால் தனது 3 மகள்களுடன் திம்மாம்பேட்டை போலீஸ் நிலையம் முன்பாக மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை மீட்டு போலீஸ் நிலையத்திற்குள் அழைத்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com