டிப்பர் லாரி மோதி சப்-இன்ஸ்பெக்டர் மகன் பலி

மோட்டார்சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் பரிதாபமாக இறந்தார்.
டிப்பர் லாரி மோதி சப்-இன்ஸ்பெக்டர் மகன் பலி
Published on

செங்குன்றம்,

சென்னை புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் சங்கர். இவர், ராயபுரம் போக்குவரத்து போலீஸ் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் நிதிஷ்குமார்(வயது 21). இவர், அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று அதிகாலை 4 மணிஅளவில் நிதிஷ்குமார் வேலை முடிந்து, அலுவலகத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் மாதவரம் பொன்னியம்மன்மேடு ஜி.என்.டி. சாலையில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது மாதவரத்தில் இருந்து மூலக்கடை நோக்கி வந்த டிப்பர் லாரி, இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நிதிஷ்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் பலியான நிதிஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரான சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ்(42) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com