

திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்துக்கு பணியாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் வேன் ஒன்று நேற்று காலை மானாம்பதி வழியாக திருப்போரூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
அந்த வேனில் 14 பெண்கள் உள்பட 17 பேர் இருந்தனர். வேனை இரும்புலிச்சேரியை சேர்ந்த அசோக்(வயது 26) ஓட்டிச்சென்றார். காலை 7 மணி அளவில் திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் கிராமம் அருகே வந்தபோது வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது.
சாலையோரம் கவிழ்ந்தது
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் வேன் நொறுங்கியது. வேனில் இருந்த அனைவரும் இடிபாடுக்குள் சிக்கி அலறினர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வேனில் சிக்கி தவித்த அனைவரையும் வேனின் கதவை உடைத்து மீட்டனர்.
இதில் டிரைவர் அசோக்கின் இடுப்பு எலும்பு முறிந்தது. வேனில் பயணம் செய்த பெண்கள் உள்பட 17 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருப்போரூர் போலீசார், காயம் அடைந்த டிரைவர், பெண்கள் உள்பட 18 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.