திருப்பூர், டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் பொதுமக்கள் தர்ணா போராட்டம்

திருப்பூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
திருப்பூர், டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
Published on

திருப்பூர்,

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி 8-வது வார்டுக்குட்பட்ட புதிய பஸ்நிலையம் அருகே உள்ள உழவர் சந்தைக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், அனைத்து கட்சியினர், உழவர் சந்தை வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தை அடுத்து, அந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்த னர். ஆனால் இதுவரை அந்த கடையை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று காலையில் அந்த டாஸ்மாக் கடை முன்பு 8 மற்றும் 9-வது வார்டு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், அருகில் உள்ள கோவில் நிர்வாகிகள், உழவர் சந்தை வியாபாரிகள் என ஏராளமானோர் திரண்டனர். பின்னர் அவர்கள் கடையை திறக்க விடாமல் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வரும் இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூடவேண்டும் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் கடை சார்பில் பார் ஒப்பந்ததாரர்கள், பணியாளர்கள் என ஏராளமானோர் எதிர்தரப்பில் கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையின் முடிவில் அந்த டாஸ்மாக் கடையை ஒரு வாரத்திற்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கடையை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்திற்கான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com