அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த, மக்கள் இப்போதே தயாராக வேண்டும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேச்சு

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த மக்கள் இப்போதே தயாராக வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார்.
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த, மக்கள் இப்போதே தயாராக வேண்டும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேச்சு
Published on

ஹாசன்,

ஹாசன் டவுனில் உள்ள ஈத்கா மைதானத்தில் நேற்று ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்று சேர வேண்டும். மேலும் பா.ஜனதாவுக்கு எதிராக போராடும் அனைத்து அமைப்புகளும் கைகோர்க்க வேண்டும். இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்று பல்வேறு மதத்தினர் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால் மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதாவின் தேசிய தலைவருமான அமித்ஷா இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிக்கிறார். ஆனால் சுலபம் அல்ல. மகாத்மா காந்தியை கொன்றவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறி வருகிறார்கள். அது கண்டிக்கத்தக்கது. நாட்டில் பசுக்களை காப்பாற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு பல்வேறு கொலை சம்பவங்களை அரங்கேற்றுகிறார்கள்.

அதனால் மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் போராட வேண்டும். பா.ஜனதாவினர் கூறும் சில கருத்துக்களை நெஞ்சை கத்தியால் கிழிப்பது போன்று கொடுமையாக உள்ளது. அரசியலில் தவறுகள் நடப்பதும், பின்னர் அவைகள் திருத்தப்படுவதும் சகஜம். அவைகள் நிரந்தரமானவை அல்ல.

நாட்டில் சுப்ரீம் கோர்ட்டே பலமில்லாமல் இருக்கிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சுப்ரீம் கோர்ட்டு உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் அனைத்தும் பெரும் தோல்வியை சந்தித்தன. பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா தலைமையில் தேர்தலை சந்தித்த பா.ஜனதா அமோக வெற்றிபெற்றது. அதனால் அக்கட்சிகளின் மூத்த தலைவர்கள் பேச்சைக்கூட நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கேட்பதில்லை.

பா.ஜனதாவில் மூத்த தலைவராக இருந்து வரும் வெங்கையா நாயுடு கூட அமைதியாக இருக்கிறார். அவரது பேச்சுக்கும் கட்சியில் மதிப்பு இல்லை. இதையெல்லாம் மக்கள் எதிர்க்க வேண்டும்.

வெறும் பேச்சால் எதையும் சாதித்திட முடியாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொன்றனர். அதையடுத்து குண்டு மழை பொழிந்து பாகிஸ்தானில் பதுங்கிருந்த ஏராளமான பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் கொன்றதாக கூறப்படுகிறது.

அதை ஆதாயமாக வைத்துதான் பிரதமர் மோடி தேர்தலில் பிரசாரம் செய்து மீண்டும் வெற்றிபெற்றார். ஆனால் அவர் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த மக்கள் இப்போதே தயாராக வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தையும் மத்திய அரசு வாபஸ் பெறும் வரை போராட வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஜனதா தளம்(எஸ்) கட்சியும் தீவிரமாக போராடும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com