1,000 பட்டதாரிகளுக்கு திறனை வளர்க்க தொழில் பயிற்சி திட்டம் - முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்

1,000 பட்டதாரிகளுக்கு திறனை வளர்க்க தொழில் பயிற்சி திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
1,000 பட்டதாரிகளுக்கு திறனை வளர்க்க தொழில் பயிற்சி திட்டம் - முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
Published on

பெங்களூரு,

கர்நாடக தொழிற்பயிற்சி மேம்பாட்டு கழகம் சார்பில் திறன் தொடர்பான இணையதள பக்க தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, அந்த பக்கத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

பயிற்சி மற்றும் வேலை தொடர்பான பல்வேறு துறையினரை ஒருங்கிணைக்க இந்த இணையதள பக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. வேலை தேடுவோர், வேலை வழங்குவோர், பயிற்சி மையங்கள், தொழில்துறை, சர்வதேச முகமைகள் மற்றும் கர்நாடக அரசை ஒருங்கிணைக்கும் ஒரு தொடர்பு பாலமாக இந்த இணையதள பக்கம் செயல்படும். இளைஞர்கள் தங்களின் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. பட்டம் பயின்ற 1,000 பேருக்கு திறனை வளர்த்துக்கொள்ள தொழில் பயிற்சி திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், வேலை தேடுவோர் மற்றும் வேலை அளிப்பவர்களை ஒருங்கிணைத்து, வருகிற 7-ந் தேதி ஆன்லைனில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக அரசு தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. இதனால் தொழில் நிறுவனங்களுக்கு தகுதியான பணியாளர்கள் கிடைப்பார்கள். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:-

இந்த திறன் மேம்பாட்டு இணையதள பக்கம், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதில் முக்கிய பங்காற்றும். இதனை இளைஞர்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புத்துறை செயலாளர் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com