மக்கள் தொகையை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு

தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு
Published on

தஞ்சாவூர்,

கருத்தரங்கை அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாம் இருவர் நமக்கு இருவர் என்பது தான் தமிழகஅரசின் கொள்கை. இதன் பிறகு நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற திட்டத்தை செயல்படுத்தியாக வேண்டும். இதை கிராமமக்களிடம் மாணவிகள் தெளிவுபடுத்த வேண்டும். உணவு, உடை, இருப்பிட பற்றாக்குறை, வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்பு இவை யாவும், பெருகி வரும் மக்கள் தொகையால் ஏற்படுகிறது. குடும்ப நல ஆலோசனைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது. பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர், குடும்ப நலத்துறை சார்பில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார். கருத்தரங்கில் ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை மகப்பேறு துறை தலைவர் பிரதீபா, பேறுகால பின்கவனிப்பு மைய திட்ட அலுவலர் மும்தாஸ் ஆகியோர் பேசினர். முன்னதாக உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், ஒருங்கிணைந்த பால் கூட்டுறவு ஒன்றிய தலைவர் காந்தி, மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத் தலைவர் புண்ணியமூர்த்தி, இயக்குனர் சரவணன், கல்வி புரவலர் ரமேஷ், தஞ்சை மருத்துவகல்லூரி முதல்வர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் மருத்துவம் மற்றும் குடும்ப நல துணை இயக்குனர் மலர்விழி வரவேற்றார். முடிவில் காசநோய் ஒழிப்பு திட்ட துணை இயக்குனர் மாதவி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com