வீட்டு வரியை குறைவாக நிர்ணயம் செய்ய ரூ.18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர், உதவியாளர் கைது

கோவையில் வீட்டு வரி குறைவாக நிர்ணயம் செய்ய ரூ. 18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் மற்றும் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வீட்டு வரியை குறைவாக நிர்ணயம் செய்ய ரூ.18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர், உதவியாளர் கைது
Published on

கோவை,

கோவை சுந்தராபுரத்தில் மாநகராட்சி தெற்கு மண்டல வரிவசூல் மையம் உள்ளது. இங்கு பில் கலெக்டராக (வரி வசூல் அதிகாரி) பணிபுரிந்து வருபவர் கவுஸ் மொய்தீன் (வயது 54).

இவர் அதே பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் செந்தில்குமார் (34) என்பவரிடம் வீடு அதிக பரப்பளவில் கட்டப்பட்டு இருப்பதாகவும், வீட்டு வரியை குறைவாக நிர்ணயம் செய்ய ரூ.30 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதற்கு அவர், ரூ.18 ஆயிரம் லஞ்சம் தர ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து செந்தில்குமார் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், பரிமளாதேவி, விஜயலட்சுமி ஆகியோர் நேற்று மதியம் 12 மணியளவில் ரசாயன மை தடவிய ரூ.18 ஆயிரத்தை செந்தில்குமாரிடம் கொடுத்து அனுப்பி விட்டு அங்கு மறைந்து நின்றனர்.

இந்த பணத்தை செந்தில்குமார் கவுஸ் மொய்தீனிடம் கொடுக்க சென்றார். அதற்கு அவர் தனது உதவியாளரான தனபால் (37) என்பவரிடம் பணத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து செந்தில்குமார் பணத்தை தனபாலிடம் கொடுத்தார். அப்போது போலீசார் அவரைகையும் களவுமாக பிடித்தனர். இதை யடுத்து பில் கலெக்டர் கவுஸ் மொய்தீன், உதவியாளர் தனபால் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் 2 பேரும் கவுண்டம் பாளையத்தில் வசித்து வருகிறார்கள். கைதான 2 பேர் மீதும் அரசு பணிக்கு லஞ்சம் கேட்டு வற்புறுத்துவது,லஞ்சம் பெறுதல் ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.லஞ்சம் வாங்கியதாக மாநகராட்சி பில் கலெக்டர் கைதானது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com