சூதாடியதை தட்டிக்கேட்ட வாலிபர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டிடம் கிராம மக்கள் மனு

சூதாட்டத்தை தட்டிக்கேட்ட வாலிபர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
சூதாடியதை தட்டிக்கேட்ட வாலிபர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டிடம் கிராம மக்கள் மனு
Published on

கடலூர்,

விருத்தாசலம் அருகே உள்ள மு.பட்டி கிராம மக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்விடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் காலனி பகுதியை சேர்ந்த 7 பேர் பணம் வைத்து சூதாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அங்கு கூலி வேலைக்கு செல்லும் பெண்களை தரக்குறைவாக பேசியும், வீண் வம்பு செய்தும் வந்தனர். இதை அறிந்து கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் குறிப்பிட்ட 7 பேரை பல முறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதியும் சூதாடியதை அறிந்து எங்கள் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி(வயது 30), சத்தியராஜ்(25) மற்றும் வெங்கடேசன்(27) ஆகிய 3 பேரும் குறிப்பிட்ட 7 பேரிடம் தட்டி கேட்டனர். அப்போது அவர்களுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்து காலனி பகுதியை சேர்ந்த 21 பேர் எங்கள் கிராமத்துக்குள் புகுந்து வாலிபர்களை சரமாரியாக தாக்கியதோடு, இனியும் எங்களிடம் நியாயம் பேசினால் உங்களை உயிருடன் விடமாட்டோம். எரித்து கொலை செய்துவிடுவோம் என மிரட்டினர்.

தாக்குதலில் படுகாயம் அடைந்த பழனிசாமி உள்ளிட்ட 3 பேரையும் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால் அவர்களுக்கு சிகிச்சை நடைபெற்று கொண்டிருந்தபோதே மங்கலம்பேட்டை போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். எதிர்தரப்பினர் மீது நாங்கள் கொடுத்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த சம்பவத்தில் தொடர்புடைய காலனி பகுதியை சேர்ந்த 21 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com