விதவை சான்று வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய அரசு பெண் ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

விதவை சான்று வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய அரசு பெண் ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
விதவை சான்று வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய அரசு பெண் ஊழியருக்கு 3 ஆண்டு சிறை
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுசாமி. இவருடைய மனைவி மகேஸ்வரி. ஆறுசாமி இறந்துவிட்டதால் கடந்த 2005-ம் ஆண்டு விதவை சான்றிதழ் கேட்டு சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் மகேஸ்வரி விண்ணப்பித்து இருந்தார். அப்போது தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த கோபி நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்த மணியின் மனைவி நவநிதி, சான்றிதழ் வழங்குவதற்கு மகேஸ்வரியிடம் ரூ.250 லஞ்சம் கேட்டார்.

இதுகுறித்து மகேஸ்வரியின் தம்பியான கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியை சேர்ந்த கதிரேசன் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனப்பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை மகேஸ்வரியிடம் கொடுத்தனர்.

கடந்த 1-8-2015 அன்று நவநிதியிடம் மகேஸ்வரி ரசாயனப்பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், நவநிதியை பிடித்து கைது செய்தனர். மேலும், அவர் மீது போலீசார் ஈரோடு முதன்மை ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த மாஜிஸ்திரேட்டு மலர்வாலண்டினா நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக நவநிதிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. நவநிதி கைது செய்யப்பட்டபோது அவருக்கு 54 வயது. லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com