சவுதி அரேபியாவிற்கு கொத்தனார் வேலைக்கு சென்றவர் திடீர் சாவு

சவுதி அரேபியாவிற்கு கொத்தனார் வேலைக்கு சென்றவர் திடீரென இறந்தார். அவரது உடலை பெற்று தரக்கோரி அவரது மனைவி கலெக்டர் கந்தசாமியிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
சவுதி அரேபியாவிற்கு கொத்தனார் வேலைக்கு சென்றவர் திடீர் சாவு
Published on

திருவண்ணாமலை,
தண்டராம்பட்டு தாலுகா வாழவச்சனூர் அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பாரதி என்பவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் பெயர் ராஜீவ்காந்தி. எங்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி எனது கணவர் சவுதி அரேபியாவிற்கு கொத்தனார் வேலைக்கு சென்றார். அங்கு சென்று வேலை செய்து மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் 3 மாதங்கள் அனுப்பினர். கடந்த 20-ந் தேதியன்று எனது கணவர் எனக்கு போன் செய்து தனக்கு வேலை செய்ய ரொம்ப கஷ்டமாக இருப்பதாகவும், ஊருக்கு வர இருப்பதாகவும் கூறினார். நானும் அவரை ஊருக்கு வருமாறு கூறினேன்.

இந்த நிலையில் இன்று (அதாவது நேற்று) காலை 6 மணி அளவில் எனக்கு சவுதி அரேபியாவில் இருந்து என் கணவருடன் வேலை செய்யும் மதுரையை சேர்ந்த ஒருவர் தொடர்பு கொண்டு உன் கணவர் ராஜீவ்காந்தி இறந்துவிட்டதாக கூறினார். மீண்டும் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டேன் யாரும் எடுத்து பேசவில்லை. எனவே, எனது கணவரின் உடலை பெற்று தருமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com