கார் உரிமையாளருக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் புகார்

காரின் உரிமையாளருக்கு ஹெல்மெட் அணியவில்லை என ரூ.100 அபராதம் விதிப்பதாக போலீசார் தகவல் அனுப்பினர். சம்பந்தப்பட்ட பெண் இதுபற்றி கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
கார் உரிமையாளருக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் புகார்
Published on

சென்னை,

சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் நந்தினி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த மாதம் 25-ந்தேதி போக்குவரத்து போலீசாரிடம் இருந்து செல்போன் எஸ்.எம்.எஸ். தகவல் ஒன்று எனக்கு வந்தது. அதில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக ரூ.100 அபராதம் செலுத்தும்படி தெரிவிக்கப்பட்டிருந்து. மேலும் அந்த தகவலில் குறிப்பிட்டிருந்த வாகன பதிவு எண் என்னுடைய காரின் பதிவு எண் ஆகும்.

செல்போன் தகவலை அனுப்பியிருந்த யானைக்கவுனி போக்குவரத்து போலீசாரிடம் இதுபற்றி கேட்டபோது, உரிய விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர். வாகனத்தில் யாரும் வெளியில் செல்லாத நிலையில் காரின் பதிவு எண்ணை குறிப்பிட்டு ஹெல்மெட் அணியவில்லை என்று ரூ.100 அபராதம் விதித்து, போக்குவரத்து போலீசார் தவறான தகவலை அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து விசாரிப்பதாக சொன்ன யானைக்கவுனி போக்குவரத்து போலீசார் மீண்டும் அதே தவறை செய்தனர். தபால் மூலமாக தவறான அபராத ரசீதை எனக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த அபராதம் இணையதளத்தில் எனது காரின் பதிவு எண்ணோடு இணைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் செய்த இந்த தவறு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, செல்போன் மூலம் எடுக்கப்பட்ட படத்தின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் வாகன பதிவு எண் சரியாக தெரியாததால் இந்த தவறு நடந்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என்று புகார் கொடுத்தவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com