

வெளிப்பாளையம்:
நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் நாகை தருமகோவில் தெருவை சேர்ந்த தேவி என்பவர் தனது குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் சசிக்குமார்(வயது40) சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். எனது கணவருக்கு திடீரென வாதநோய் ஏற்பட்டு வேலைக்கு செல்லமுடியாமல் படுத்தப்படுக்கையாக உள்ளார். இதனால் வருமானம் இன்றி குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறேன். எனவே எனக்கு ஏதாவது வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.