அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்க கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்குன்றம் அருகே அரசு பள்ளிக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான கோரிக்கை மனுவை காந்தி சிலையிடம் பள்ளி மாணவர்கள் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்க கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி பல வருடங்களாக இயங்கி வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு அருகே கிராமநத்தம் என்ற இடத்தில் சுமார் 44 சென்ட் நிலத்தை பள்ளிக்கூட மைதானமாக பயன்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் தனிநபர் ஒருவர், அந்த இடம் தனக்கு சொந்தமானது என கூறினார். இது தொடர்பாக கிராம நலசங்கம் சார்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த இடம் அரசு பள்ளிக்கு சொந்தமானதா?, தனி நபருக்கு சொந்தமானதா? என விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் தனிநபர், ரூ.10 கோடி மதிப்பிலான அந்த இடத்தை சுற்றிலும் சுவர் அமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாடியநல்லூர் கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர், தனிநபர் மேற்கொண்டு வரும் சுவர் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி, அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்டு மீண்டும் அரசு பள்ளியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுகூறி நேற்று பாடியநல்லூரில் உள்ள காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர். பின்னர் இது தொடர்பான கோரிக்கை மனுவை பள்ளி மாணவ-மாணவிகள் அங்கிருந்த காந்தி சிலையிடம் கொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி, வருவாய் ஆய்வாளர் சிவகுமார் உள்ளிட்டோரும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com