கோவை நகைபட்டறை ஊழியரிடம் 1½ கிலோ தங்கநகையை கொள்ளையடித்த 2 பேர் கைது

கோவை நகை பட்டறை ஊழியரிடம் 1½ கிலோ தங்க நகையை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை நகைபட்டறை ஊழியரிடம் 1½ கிலோ தங்கநகையை கொள்ளையடித்த 2 பேர் கைது
Published on

கோவை,

கோவையில் உள்ள ஒரு நகைபட்டறையில் ஊழியராக வேலை செய்து வந்தவர் முரளி(வயது50). இவர் தங்கநகைகளை வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வது வழக்கம். அதன்படி அவர், கடந்த மாதம் 15-ந்தேதி ஆம்னி பஸ்சில் பெங்களூருவுக்கு நகைகளை விற்பனைக்காக கொண்டு சென்றார்.

அப்போது முரளியிடம் இருந்த 1 கிலோ தங்கநகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கோவை ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், வடமாநில ஆசாமிகள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இதுகுறித்து உத்தரபிரதேச மாநிலத்தில் சிறப்பு படை கமாண்டராக பணியாற்றி வரும் தமிழ்நாட்டை சேர்ந்த முனிராஜ் என்பவருக்கு நகை வியாபாரிகள் தகவல் கொடுத்தனர். அவர், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்ட போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினார்.

இதில், கோவை நகைபட்டறை ஊழியரிடம் கொள்ளையடித்த ஆசாமிகள் பரேலி பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனே பரேலி போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, நகைகளை கொள்ளையடித்த பரேலி அருகே உள்ள பிஜ்னோரை சேர்ந்த எக்ஸான் (வயது47), தேவேந்தர்(25) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.44 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கநகைகளும் மீட்கப்பட்டன.

இது குறித்து உத்தரபிரதேச மாநில போலீசார், கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது தான் கோவை நகைபட்டறை ஊழியரிடம் நகைகளை கொள்ளையடித்தவர்களை உத்தரபிரதேச மாநில போலீசார் கைது செய்தது கோவை போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து நகை கொள்ளையர்கள் 2 பேர் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை கோவைக்கு கொண்டு வருவதற்காக போலீசார் உத்தரபிரதேசம் விரைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com