நண்பர்களுடன் சேர்ந்து சாலையோர ஓட்டலில் உணவு சாப்பிட்ட - நடிகர் சிவராஜ்குமார்

மலவள்ளி அருகே, சாலையோர ஓட்டலில் நண்பர்களுடன் சேர்ந்து நடிகர் சிவராஜ்குமார் உணவு சாப்பிட்டார். அப்போது அவருடைய ரசிகர்கள் பலர் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
நண்பர்களுடன் சேர்ந்து சாலையோர ஓட்டலில் உணவு சாப்பிட்ட - நடிகர் சிவராஜ்குமார்
Published on

ஹலகூர்,

மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனும், கன்னட திரையுலகில் ஹாட்ரிக் ஹீரோ என்ற பெயர் பெற்ற நடிகருமான சிவராஜ்குமார் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மண்டியா மாவட்டத்தில் வசித்து வரும் தனது நண்பர்களை பார்க்க திட்டமிட்டார். அதற்காக அவர் பெங்களூருவில் உள்ள சில நண்பர்களுடன் சேர்ந்து மண்டியாவுக்கு வந்தார்.

பின்னர் மண்டியாவில் உள்ள நண்பர்களையும் அழைத்துக் கொண்டு மலவள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட ஹலகூருக்கு சென்றார். அங்கு தனது உறவினர்கள் மற்றும் பழைய நண்பர்களை சந்தித்தார். அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அதையடுத்து அவர் நண்பர்களுடன் காரில் முத்தத்தி வனப்பகுதியில் காவிரி கரையோரத்தில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயா கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.

அதன்பின்னர் அவர் பெங்களூரு நோக்கி நேற்று காலையில் புறப்பட்டார். அவர் மலவள்ளி அருகே மத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையோரம் அமைந்திருக்கும் ஒரு ஓட்டல் முன்பு காரை நிறுத்தினார். பின்னர் அவர் காரில் இருந்து இறங்கி அந்த ஓட்டலுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஓட்டல் உரிமையாளர் உள்பட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள் மகிழ்ச்சி ததும்ப சிவராஜ் குமாரை வரவேற்று உபசரித்தனர்.

அப்போது அவர் அந்த ஓட்டலில் இட்லி, தோசை, எலுமிச்சை சாதம் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டார். அவருடன் வந்திருந்த நடிகர் குருதத் மற்றும் நண்பர்களும் இட்லி, தோசை ஆகியவற்றை வாங்கி ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.

பலர் சிவராஜ் குமார் அந்த சாதாரண ஓட்டலில் உணவு சாப்பிடுவதை தங்களுடைய செல்போன்களில் வீடியோ எடுத்தனர். ரசிகர்கள் பலர் சிவராஜ் குமாருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் சிவராஜ் குமார் வந்திருப்பது குறித்து அறிந்த அவருடைய ரசிகர்கள் ஏராளமானோர் அந்த ஓட்டல் முன்பு கூடினர்.

பின்னர் ஓட்டலில் இருந்து வெளியே வந்த நடிகர் சிவராஜ் குமார், தனது ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். மேலும் அவர்களுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், எனக்கு ஹலகூரில் உறவினர்கள் உள்ளனர். அவர்களை பார்க்க இவ் வழியாக வரும்போதெல்லாம் இந்த ஓட்டலில் சாப்பிடுவேன். இந்த ஓட்டலில் இட்லி, தோசை ஆகியவை நன்றாக இருக்கும். கடந்த 40 வருடங் களாக இந்த ஓட்டல் இங்கு செயல்பட்டு வருகிறது. சிறு வயது முதலே நான் இங்கு வருவதை வாடிக்கை யாக கொண்டுள்ளேன் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com