குளு, குளு சீசனையொட்டி கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

குளு, குளு சீசன் மற்றும் வார விடுமுறையையொட்டி நேற்று கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். சோதனை சாவடி தாமதமாக திறக்கப்பட்டதால் 5 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
குளு, குளு சீசனையொட்டி கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Published on

கொடைக்கானல்:
குளு, குளு சீசன் மற்றும் வார விடுமுறையையொட்டி நேற்று கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். சோதனை சாவடி தாமதமாக திறக்கப்பட்டதால் 5 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
குளு, குளு சீசன்
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகல் வேளையில் வெப்பம் இருந்தாலும், பிற்பகல் முதல் மேகங்கள் சூழ்ந்து ரம்மியமான சூழல் நிலவுகிறது. அதேபோல் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நீர்வீழ்ச்சிகளும் தோன்றி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறது.
இந்தநிலையில் வாரவிடுமுறை மற்றும் குளு, குளு சீசனையொட்டி நேற்று அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். அவர்கள் சுற்றுலா வேன்கள், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றில் அதிக அளவில் வருகை தந்தனர்.
சுற்றுலா பயணிகள் உற்சாகம்
இதற்கிடையே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் சுற்றுலா இடங்கள் களைகட்டின. பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, பைன்மரக்காடு, குணா குகை, மோயர் பாயிண்ட், பில்லர்ராக் உள்ளிட்ட சுற்றுலா இடங்களையும், தேவதை அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நீர்நிலைகளையும் கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
அதேபோல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
அணிவகுத்து நின்ற வாகனங்கள்
கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால், பூம்பாறை பிரிவு பகுதியில் உள்ள வனத்துறை சோதனை சாவடியை கடந்து செல்ல வேண்டும். தற்போது சீசன் காலம் என்பதால் சோதனை சாவடியை தினசரி காலை 8 மணிக்கு திறக்க வேண்டும் என்று மாவட்ட வன அதிகாரி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட நேரத்தில் சோதனை சாவடி திறக்கப்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று காலை 8.45 மணி வரை சோதனை சாவடி திறக்கப்படவில்லை. இதனால் அப்சர்வேட்டரியில் இருந்து சோதனை சாவடி வரையிலான சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுலா வாகனங்களும், மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் வாகனங்களும் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் மற்றும் சுற்றுலா வாகன டிரைவர்கள், உரிமையாளர்கள் சோதனை சாவடி பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு வனத்துறையினர் யாரும் இல்லை. உடனே இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பின்பு காலை 9 மணி அளவில் சோதனை சாவடி திறக்கப்பட்டது. பின்னர் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சுற்றுலா இடங்களுக்கு சென்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com