ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊரடங்கு தளர்வை தொடர்ந்து ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஒரே நாளில் 9 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்து இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

ஊட்டி

ஊரடங்கு தளர்வை தொடர்ந்து ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஒரே நாளில் 9 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்து இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

ஊரடங்கில் தளர்வு

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த மாத இறுதியில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப் பட்டன. இதையடுத்து சுற்றுலா தலங்களில் பார்வை நேரம் வழக்கம்போல் நீட்டிக்கப்பட்டது.

இருப்பினும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்பட அனைத்து பூங்காக்களிலும் புல்வெளிகளில் அமர தடை விதிக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு தாவரவியல் பூங்கா, பெரிய புல்வெளி மைதானத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வார விடுமுறை நாளான ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

அவர்கள் கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர். சாலையோர அலங்காரங்கள் முன்பு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பெரிய புல்வெளி மைதானத்தில் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். அப்போது இயற்கை எழில் மிகுந்த பூங்காவின் அழகை கண்டு ரசித்தனர்.

ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரியின் நடுவே செயற்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டியது சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. ஏரியின் பின்னணியில் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

9 ஆயிரம் பேர்

அதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, சூட்டிங்மட்டம் பைக்காரா படகு இல்லம், தேயிலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. ஊரடங்கு தளர்வை தொடர்ந்து ஒன்றரை மாதங்களுக்கு பின்னர் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்தது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 944 பேர் வருகை தந்தனர். நேற்று ஒரே நாளில் 9 ஆயிரத்து 52 பேர் தாவர வியல் பூங்காவை கண்டு ரசித்தனர்.

படகு இல்லத்துக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து சென்றனர். சுற்றுலா வாகனங்கள் அதிகமாக வந்ததால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com