மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல் அ.ம.மு.க. பிரமுகரின் மனைவி உள்பட 2 பேர் பலி

வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் அ.ம.மு.க. பிரமுகரின் மனைவி உள்பட 2 பேர் பலியாகினர்.
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல் அ.ம.மு.க. பிரமுகரின் மனைவி உள்பட 2 பேர் பலி
Published on

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குங்குமக்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மருதகோட்டை. அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பிரமுகர். இவர், எம்.ஜி.ஆர்.மன்ற நகர செயலாளராகவும் உள்ளார். அவருடைய மனைவி சங்கீதா (வயது 33). நேற்று இவர் லந்தகோட்டையில் உள்ள கருப்பணசாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தார்.

இதற்காக அவர், வேடசந்தூர் அருகே உள்ள குழந்தைபட்டியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (33) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். வேடசந்தூர்-கோவிலூர் சாலையில், கோ.ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன்பு உள்ள வளைவில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

அப்போது, எதிரே ஹாலோ பிளாக் கற்களை ஏற்றி கொண்டு வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சங்கீதாவும், ஈஸ்வரமூர்த்தியும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து நடந்தவுடன் டிராக்டர் டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பானு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com