

வள்ளியூர் அருகே நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் இளவட்டக்கல்லை தூக்கி இளைஞர்கள், பெண்கள் அசத்தினர்.
காணும் பொங்கல் தினத்தை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளையில் பாரம்பரிய விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இதில் இளவட்டக்கல், உரல் தூக்குதல் போட்டிகளும் நடைபெற்றன. ஆண்கள், பெண்கள் என பலர் ஆர்வமும் போட்டியில் கலந்து கொண்டனர். 70 கிலோ, 90 கிலோ, 129 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லை இளைஞர்கள் ஆர்வமுடன் தூக்கினர். உருளை வடிவிலான இளவட்டக்கல்லை தூக்கி மார்போடு அணைத்து தோளில் வைத்து பின்புறமாக போட்டனர். சில இளைஞர்கள் உரலை ஒற்றை கையால் தலைக்கு மேல் தூக்கி வைத்தனர்.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் 40 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை தூக்கி தோளில் வைத்து பின்புறமாக போட்டனர். 45 கிலோ எடையுள்ள உரலையும் தூக்கி அசத்தினர்.
129 கிலோ இளவட்டக்கல் தூக்குதல் போட்டியில் தங்கராஜ் முதலிடமும், முத்துபாண்டி 2-வது இடமும் பிடித்தனர். பெண்களுக்கான இளவட்டக்கல் தூக்குதல் போட்டியில் பத்மபிரியா முதலிடத்தையும், தங்கபுஷ்பம் 2-வது இடத்தையும் பிடித்தனர்.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இன்பதுரை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பரிசுகளை வழங்கினார்.
விழாவில் வள்ளியூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செல்வராஜ், நகர துணை செயலாளர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வடலிவிளை செம்புலிங்கநாடார் நற்பணி மன்றத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.