திருச்சியில் பரிதாபம்: பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 வயது குழந்தை பலி

திருச்சியில் பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
திருச்சியில் பரிதாபம்: பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 வயது குழந்தை பலி
Published on

கே.கே.நகர்,

திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூர் காவல்காரன் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 32). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி(29). இவர்களின் மகன் அரிகிருஷ்ணன்(2).

சிவக்குமாரின் வீட்டின் அருகில் சின்னப்பன் என்பவர் மண் சுவர்களால் ஆன குடிசையில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக திருச்சியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சின்னப்பனின் வீட்டு சுவர் சேதமடைந்து காணப்பட்டது.

சுவர் விழுந்து குழந்தை பலி

இந்தநிலையில் நேற்று மாலை திடீரென அந்த சுவர் இடிந்து விழுந்தது. அதன் அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தை அரிகிருஷ்ணன் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com