விலையில்லா செல்போன் வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்

விலையில்லா செல்போன் வழங்காததை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விலையில்லா செல்போன் வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான மாற்றுத்திறனாளிகள் நேற்று திடீரென முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கிருந்த மாற்றுத்திறனாளித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கூடியிருந்த மாற்றுத்திறனாளிகள் பேசும்போது, பார்வையற்றோர் மற்றும் வாய் பேச முடியாத, காது கேளாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் அரசு சார்பாக வழங்கும் விலையில்லா செல்போன்கள் வழங்கக்கோரி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்து இருந்தோம்.

ஆனால் விண்ணப்பித்த எங்களுக்கு இதுநாள் வரையிலும் விலையில்லா செல்போன் வழங்கப்படவில்லை.

தர்ணா போராட்டம்

இதுகுறித்து பலமுறை மாற்றுத்திறனாளி அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் இதை ஏற்றுக்கொள்ளாத மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு செல்போன் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் இங்கிருந்து செல்ல மாட்டோம் என கூறி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளிடம் அனைவருக்கும் செல்போன் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com