

ஓ.என்.ஜி.சி. உற்பத்தி பொது மேலாளர் புகழேந்தி கூறியதாவது:-
நமது நாட்டில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் தேவை அதிகரித்துள்ளதால் அது கிடைப்பதற்கான சாத்தியகூறுகள் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு அதனை எடுப்பதற்காக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படுகிறது. மாநில அரசு மற்றும் சுகாதாரத்துறை அனுமதியுடன் தான் பணிகள் அனைத்தும் நடக்கிறது.
நாடு முழுவதும் தேவைப்படும் கச்சா எண்ணையின் அளவில் தற்போது 30 சதவீதம் தான் உள்நாட்டில் கிடைக்கிறது. மற்ற 70 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தான் ஈடு செய்ய வேண்டி உள்ளது. அதிக ஆழத்தில் ஏறக்குறைய ஆயிரம் அடி முதல் 11 ஆயிரம் அடி அளவில் இருந்து தான் மண்ணுடன் கலந்துள்ள கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எடுக்கிறோம். இதனால் மக்கள் பயன்பாட்டிற்கு உள்ள நிலத்தடிநீர் பாதிக்கப்படாது. உரிய தொழில்நுட்பம் மேற்கொள்ளப்படுகிறது. பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இல்லை.
குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள இடம் குறித்து அறிவிப்பு பலகை வைத்துள்ளோம். நாளடைவில் அவை அகற்றப்பட்டு இருக்கலாம். அது குறித்து தெரிய வந்தால் அந்த பகுதியில் உரிய அடையாள பலகைகள் வைக்கப்படும்.
மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
வெளியேற்ற வேண்டும்
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தெரிவித்த கருத்து:-
காவிரி டெல்டா பகுதியில் விளைநிலங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைக்கக் கூடாது. டெல்டா பகுதியில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு எதுவும் எடுக்கக்கூடாது. உணவு சக்தியை அழித்து எரிசக்தியை எடுப்பதால் என்ன பயன்?
கதிராமங்கலம் கிராம மக்கள் நடைமுறையில் ஓ.என்.ஜி.சி.யால் பல்வேறு விபத்துகளை பார்த்துள்ளனர். அதனால் தான் எங்கள் பகுதியில் வேண்டாம் என போராட்டம் நடத்துகிறார்கள். காவிரி டெல்டா பகுதியில் எங்குமே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செயல்படக்கூடாது. அதனை உடனே வெளியேற்ற வேண்டும். இதனை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் கடலில், ஆற்றுப்படுகைகளில் இது போன்று எடுக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் தான் விளைநிலங்களில் எடுக்கப்படுகிறது. நெல், கரும்பு, வாழை சாகுபடி செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். ஆனால் இதனை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள்.
இவ்வாறு மணியரசன் தெரிவித்தார்.
விளைநிலங்கள் பாதிப்பு
ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ள இடத்தின் உரிமையாளர் ஸ்ரீராம் கூறியதாவது:-
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைத்த போது இது போன்ற பாதிப்புகள் வரும் என்று நிலத்தின் உரிமையாளர்கள் யாருக்கும் தெரியாது. மேலும் எங்கள் இடத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குத்தகை உரிமத்தை புதுப்பித்தனர். ஆனால் 2014-ம் ஆண்டுக்குப்பின்னர் உரிமத்தை புதுப்பிக்கவில்லை.
இது குறித்து நாங்கள் கேட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய பதில் அளிப்பது இல்லை. மேலும் விளைநிலங்களில் குழாய்கள் எப்படி போகிறது என்பது தெரியாததால் வேலைக்கு கூட ஆட்கள் வர பயப்படுகிறார்கள். தற்போது எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதால் விளைநிலங்கள் பாழ்பட்டுள்ளது. நிலத்தில் படிந்துள்ள எண்ணெய் கசிவுகளை எப்படி அகற்றுவது என்றும் தெரியவில்லை. தற்போது நடந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன? என கேட்டுள்ளோம். விளைநிலங்களில் படிந்துள்ள எண்ணெய், மழை பெய்வதால் மற்ற வயல்களுக்கும் பரவி அந்த விளைநிலங்களும் பாதிக்கப்படுகிறது.
எனவே இதனை அகற்றுவது எப்படி? இனி இது போன்று நடைபெறாமல் இருக்க நிரந்தர தீர்வு என்ன? என்பது குறித்து ஓ.என்.ஜி.சி. நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம். அதற்கு அவர்கள் செப்டம்பர் மாதம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிர்வலைகளால் சந்தேகம்
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், ஓ.என்.ஜி.சி.யை எதிர்த்து போராடிய 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும். மேலும் எங்கள் பகுதிக்கு ஓ.என்.ஜி.சி. வேண்டாம். எனவே அதனை அப்புறப்படுத்த வேண்டும்.
பழைய குழாய்கள் பழுதடைந்துள்ளதால் புதிய குழாய்கள் பதிக்க வேண்டும் என்று ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் வந்த போது கெமிக்கல் டேங்கர் லாரியுடன் வந்தனர். இது எங்களை முதலில் சந்தேகப்பட வைத்தது. இது குறித்து கேட்ட போது உரிய விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான பணிகளில் ஈடுபடக்கூடும் என சந்தேகம் அடைந்தோம். ஜூன் 2-ந்தேதி எங்கள் பகுதியில் திருவிழா நடந்த போது, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய குழாய்கள் பதித்ததில் கிராமங்களில் அதிர்வலைகள் ஏற்பட்டன. இதனால் வேறு ஏதாவது செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என அஞ்சுகிறோம்.
எங்கள் பகுதியில் உள்ள குடிநீரை பரிசோதனைக்காக அரசு எடுத்துச்சென்றது. ஆனால் இதுவரை எந்த தகவலும் வரவில்லை. ஓ.என்.ஜி.சி. போட்டுள்ள குழாய்கள் தரமற்றதாக உள்ளது. அதனால் தான் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இனி இது போன்ற சம்பவம் நடைபெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம். எனவே எங்கள் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேற்கொண்ட பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மேற்கண்டவாறு முருகானந்தம் தெரிவித்தார்.
ஊரை விட்டு செல்ல முடிவு செய்த விவசாயி
கதிராமங்கலத்தை சேர்ந்த விவசாயி ராஜாராமன் கூறுகையில், ஓ.என்.ஜி.சி.யால் எங்கள் பகுதியில் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. கால்நடைகள் கூட அந்த தண்ணீரை குடிக்க முடியாத நிலை உள்ளது. எனது தாயாரும் நோயினால் அவதிப்பட்டார். அப்போது குடிநீரால் தான் பிரச்சினை இருக்கிறது என்பதை அறிந்து எனது தாயாரை கும்பகோணத்திற்கு அழைத்துச்சென்று அங்கேயே தங்க வைத்தேன். அதன் பின்னர் அவரது உடல்நலம் சீராக உள்ளது. இதனால் எனது குடும்பத்தினரையும் கும்பகோணத்திற்கு அனுப்பி வைத்து விட்டேன். நான் மட்டும் தான் கதிராமங்கலத்தில் தங்கி இருந்து விவசாயம் செய்து வந்தேன். இந்த பிரச்சினையால் நானும் கதிராமங்கலத்தை விட்டு காலி செய்ய முடிவு செய்தேன். ஆனால் பொதுமக்கள் கேட்டுக்கொண்டதால் அவ்வாறு செல்லவில்லைஎன்றார்.