லாரி - மோட்டார்சைக்கிள் மோதல் பள்ளி மாணவன் பலி

பாடியநல்லூர் மார்க்கெட் அருகே வந்தபோது அங்கு சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதியது.
லாரி - மோட்டார்சைக்கிள் மோதல் பள்ளி மாணவன் பலி
Published on

செங்குன்றம்,

சென்னை அமைந்தகரை என்.என்.தோட்டம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா. இவருடைய மகன் கார்த்திக்(வயது 12). இவர், அங்குள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் செங்குன்றத்தை அடுத்த பி.டி. மூர்த்திநகர் அன்னை சத்யா தெருவில் உள்ள தனது மாமா கரிக்கோல்ராஜ் வீட்டுக்கு வந்து இருந்தான்.

நேற்று முன்தினம் இரவு கார்த்திக் தனது மாமா கரிக்கோல்ராஜூடன் மோட்டார் சைக்கிளில் செங்குன்றத்தில் இருந்து பி.டி.மூர்த்தி நகர் நோக்கி வந்து கொண்டிருந்தான். பாடியநல்லூர் மார்க்கெட் அருகே வந்தபோது அங்கு சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக், படுகாயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தான். கரிக்கோல்ராஜ், காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com