காஞ்சீபுரம் அருகே, மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; 2 வாலிபர்கள் பலி

காஞ்சீபுரம் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
காஞ்சீபுரம் அருகே, மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; 2 வாலிபர்கள் பலி
Published on

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டை இந்திரா நகரைச் சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் ஜெகன் (வயது 20). வெளியூரில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் சந்தோஷ் (20). இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.

இந்தநிலையில் நேற்று தனது பெற்றோர் மற்றும் நண்பர்களை பார்ப்பதற்காக ஜெகன் ஊருக்கு வந்தார். பின்னர் அவர் தனது மோட்டார் சைக்கிளில் சந்தோஷை அழைத்துக்கொண்டு காஞ்சீபுரத்துக்கு புறப்பட்டார். காஞ்சீபுரத்தை அடுத்த நசரத்பேட்டை அருகே சென்றபோது முன்னால் சென்ற கனரக லாரியை முந்திச்செல்ல முயன்றனர்.

அப்போது அந்த லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு அதிவேகமாக சென்றுவிட்டது. லாரி மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற ஜெகன், சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுபற்றி தகவல் அறிந்த காஞ்சீபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக் காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கனரக லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com