மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; வாலிபர் பலி

தென்காசி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பலியானார்.
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; வாலிபர் பலி
Published on

தென்காசி:

தென்காசி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பட்டதாரி வாலிபர் பலியானார். மற்றொரு சிறுவன் படுகாயம் அடைந்தான்.

பட்டதாரி வாலிபர்

தென்காசி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுடலையாண்டி மகன் கிஷோர் (வயது 22). இவர் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் அறிவியல் படித்து முடித்துள்ளார். தற்போது பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார்.

இவர் மோட்டார் சைக்கிளில் தென்காசியில் இருந்து நேற்று மாலை 3.30 மணிக்கு கணக்கப்பிள்ளை வலசைக்கு தனது நண்பரை பார்க்க சென்று கொண்டிருந்தார். அவருடன் கிஷோரின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜேக்கப் மகன் ஜெப்ரின் (11) என்ற சிறுவனும் மோட்டார் சைக்கிளின் பின்புறம் இருந்துள்ளான்.

லாரி மோதி சாவு

கணக்கப்பிள்ளை வலசையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்றபோது அவருக்கு பின்புறம் வந்த ஒரு டிப்பர் லாரி, அவரது மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதியது. இந்த விபத்தில் கிஷோரின் உடல் லாரியின் சக்கரத்தின் அடியில் சிக்கி அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னால் இருந்த ஜெப்ரின் பலத்த காயத்துடன் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

டிரைவருக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கற்பகராஜ் வழக்குப்பதிவு செய்து கிஷோரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை நடத்தி வருகிறார். லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com