

விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள அய்யூர்அகரம் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று காலை விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், அய்யூர்அகரம் ஏரிக்கரை அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை வழிமறித்தபோது அதன் டிரைவர், லாரியை நிறுத்தாமல் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மீது மோதுவதுபோல் வேகமாக சென்றார். இதில் சுதாரித்துக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் அங்கிருந்து ஒதுங்கிக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த லாரியை மடக்கி, அதனை ஓட்டிவந்த டிரைவர் மற்றும் அவருடன் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் விழுப்புரம் அருகே சிந்தாமணி பகுதியை சேர்ந்த டிரைவர் ரகு (வயது 38), புருசோத்தமன்(50) ஆகியோர் என்பதும் அதே பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரகு, புருசோத்தமன் ஆகியோர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.