பெண் முகத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை அடித்து சங்கிலி பறிக்க முயற்சி தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு

வேதாரண்யம் அருகே வீடு புகுந்து பெண் முகத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை அடித்து சங்கிலி பறிக்க முயன்றவர், அந்த பெண் கூச்சலிட்டதால் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெண் முகத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை அடித்து சங்கிலி பறிக்க முயற்சி தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு
Published on

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமம் சுனாமி நகரை சேர்ந்தவர் அன்பரசன். இவருடைய மனைவி சுஷ்மிதா(வயது22). அன்பரசன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சுஷ்மிதா தன் குழந்தை மற்றும் மாமனார்- மாமியாருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சுஷ்மிதாவின் மாமியார் மீன் விற்பனை செய்ய வெளியில் சென்று விட்டார். இரவு சுஷ்மிதா தன் குழந்தையுடன் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அவருடைய மாமனார் வீட்டு மாடியில் படித்து தூங்கினார். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சிவலிங்கம் என்பவர் தனது உடல் முழுவதும் போர்வையால் மூடிக்கொண்டு சுஷ்மிதாவின் வீட்டு சுவர் ஏறி உள்ளே குதித்து வீட்டுக்குள் சென்றார்.

பின்னர் அவர் சுஷ்மிதா முகத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை அடித்து விட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது பூச்சிக்கொல்லி மருந்தின் நெடி தாங்க முடியாமல் கண்விழித்த சுஷ்மிதா தனது முன் ஒருவர் போர்வையால் உடல் முழுவதும் மூடியபடி நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவலிங்கம் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து தகவல் அறிந்த சுஷ்மிதாவின் கணவர் வெளிநாட்டில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவலிங்கத்தை வலைவீசி தேடி வருகிறார்கள். வீடுபுகுந்து பெண் முகத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை அடித்து சங்கிலியை ஒருவர் பறிக்க முயன்ற சம்பவம் ஆறுகாட்டுத்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com