தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
Published on

தூத்துக்குடி,

மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய கோரி தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜாய்சன் தலைமை தாங்கினார். கார்த்திக், ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

அதே போல் மறவன்மடத்தில் உள்ள பிஷப் கால்டுவெல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் மாரிசெல்வம் தலைமையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதனையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய கோரி தூத்துக்குடி தபால்தந்தி காலனியில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதற்கு கிளை செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்து முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ராஜா கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் நிர்வாகிகள் ஆனந்தன், காசி, முருகன், பாலா, திவாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com