தூத்துக்குடியில் இளம்பெண் வெட்டிக்கொலை: கோவில்பட்டி கோர்ட்டில் மாமியார் சரண்

தூத்துக்குடியில் இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய மாமியார் கோவில்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
தூத்துக்குடியில் இளம்பெண் வெட்டிக்கொலை: கோவில்பட்டி கோர்ட்டில் மாமியார் சரண்
Published on

கோவில்பட்டி,

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனியைச் சேர்ந்தவர் முகமது கனி மகன் அகமது ராஜா. இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய 2வது மனைவி கவிதா(வயது 24). இவர்களுக்கு தஷ்தான்(2) என்ற மகனும், பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தையும் உள்ளனர்.

அகமது ராஜா தன்னுடைய முதல் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்தபோது கவிதாவுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். அதேபோன்று கவிதாவுக்கும் ஏற்கனவே திருமணமாகி, 7 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கவிதா தன்னுடைய முதல் கணவர், குழந்தையை விட்டு பிரிந்து வாழ்ந்தபோது 2வதாக அகமது ராஜாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 25ந்தேதி மாலையில் கவிதா தனது வீட்டில் தலையில் வெட்டுக் காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கோர்ட்டில் மாமியார் சரண்

இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அகமது ராஜாவிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், அகமது ராஜா 2வதாக கவிதாவை திருமணம் செய்ததை அவரது தாயார் பாத்திமா பீவி(49) விரும்பவில்லை. இதனால் பாத்திமா பீவிக்கும், கவிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மாமியார்மருமகள் சண்டையால் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்பது தெரிய வந்தது.

தலைமறைவாக இருந்த பாத்திமா பீவியை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் கோவில்பட்டி 2வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பாத்திமா பீவி சரண் அடைந்தார். அவரை வருகிற 4ந் தேதி வரையிலும் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு வீரணன் உத்தரவிட்டார். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள கவிதாவின் மாமனார் முகமது கனியை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com