தூத்துக்குடியில், மொட்டை மாடியில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி திருடிய கொத்தனார் கைது

தூத்துக்குடியில் மொட்டை மாடியில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி, செல்போன்களை திருடிய கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில், மொட்டை மாடியில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி திருடிய கொத்தனார் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி வி.எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி சகாயமொபினா (வயது 35). இவர் கடந்த 13-ந்தேதி இரவு கணவன் மற்றும் குழந்தைகளுடன் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது தனது 5 பவுன் சங்கிலியை அருகில் கழற்றி வைத்துவிட்டு அதன் அருகே 2 செல்போன்களையும் வைத்து இருந்தாராம்.

இந்த நிலையில் நள்ளிரவில் சுரேஷ் வீட்டு மாடிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கு இருந்த தங்க சங்கிலி மற்றும் 2 செல்போன்களை திருடியுள்ளார். பின்னர் சகாய மொபினாவின் கொலுசை கழற்ற முயன்றுள்ளார். அப்போது அவர் விழித்து சத்தம் போட்டார். இதனால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் திருடப்பட்ட செல்போன் எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ராஜகோபால் நகரை சேர்ந்த முத்துகுட்டி (31) என்பவரை சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி கைது செய்தார். அவரிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலி, 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com