நாகர்கோவில் அருகே இரட்டைக்கொலை : மோதி பார்ப்போம் என சவால் விட்டதால் தீர்த்து கட்டினோம் சரண் அடைந்தவர்கள் வாக்குமூலம்

நாகர்கோவில் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில் சரண் அடைந்தவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மோதி பார்ப்போம் என சவால் விட்டதால் இருவரையும் தீர்த்து கட்டியதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
நாகர்கோவில் அருகே இரட்டைக்கொலை : மோதி பார்ப்போம் என சவால் விட்டதால் தீர்த்து கட்டினோம் சரண் அடைந்தவர்கள் வாக்குமூலம்
Published on

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே வண்டிகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகேசபெருமாள் குமார். இவருடைய மகன் அர்ஜூன் (வயது 17). இவரும், அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (21) என்ற கட்டிட தொழிலாளியும் நண்பர்கள்.

கடந்த 7-ந் தேதி அன்று என்.ஜி.ஓ. காலனி அருகே அர்ஜூனும், அஜித்குமாரும் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். பின்னர் கொலை கும்பல் தலைமறைவாகி விட்டது. இந்த இரட்டைக்கொலை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இதற்கிடையே கொலையில் தொடர்புடைய என்.ஜி.ஓ. காலனி அருகே காமராஜ் சாலையை சேர்ந்த ரமேஷ் (30), வண்டிகுடியிருப்பு அரசன் காட்டுவிளையை சேர்ந்த சுந்தர் (27) ஆகிய 2 பேரும் சென்னையில் உள்ள ஒரு கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் சுசீந்திரம் போலீசார், காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டனர்.

இதற்காக சரண் அடைந்தவர்களை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர். பின்னர் ரமேஷ், சுந்தரை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. தொடர்ந்து சுசீந்திரம் போலீசார் 2 பேரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அதில், கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அஜித்குமார் சிலருடன் நாகர்கோவிலில் இருந்து வண்டிகுடியிருப்புக்கு செல்லும் ஒரு மினி பஸ்சில் பயணம் செய்துள்ளார். அந்த பஸ்சில் கண்டக்டராக கல்லடிவிளையை சேர்ந்த சுகுமாரன் இருந்தார். அப்போது அஜித்குமார் டிக்கெட் எடுக்காமல் சுகுமாரனிடம் தகராறு செய்துள்ளார்.

இதுதொடர்பாக சுகுமாரன் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அஜித்குமார் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் சுகுமாரன் மீது அஜித்குமார் தரப்பினர் கோபத்தில் இருந்துள்ளனர். இந்தநிலையில் சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பிறகு சுகுமாரன், அஜித்குமார் ஊருக்கு சென்றுள்ளார்.

அப்போது, சுகுமாரன், என்.ஜி.ஓ. காலனி அருகே காமராஜ் சாலையை சேர்ந்த ரமேஷிடம் பேசி கொண்டிருந்தார். ரமேஷ் வெல்டிங் தொழிலாளி. இதனை அறிந்த அஜித்குமார், அர்ஜூன் உள்பட 4 பேர் சேர்ந்து ரமேஷை தாக்கியுள்ளனர். எங்கள் மீது போலீசில் புகார் கொடுத்தவரிடம் நீ எப்படி பேசலாம் என்று கூறி இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ரமேசுக்கும், அஜித்குமார் தரப்பினருக்கும் இடையே பகை ஏற்பட்டது. அஜித்குமார், அர்ஜூன் ஆகிய 2 பேரும் தொடர்ந்து ரமேஷை செல்போன் மூலம் மிரட்டி வந்துள்ளனர். அப்போது, தைரியம் இருந்தால், எங்களுடன் வந்து மோதி பார் என்று சவால் விட்டுள்ளனர். இதனை ரமேஷ், வண்டிகுடியிருப்பு அரசன் காட்டுவிளையை சேர்ந்த சுந்தரிடம் தெரிவித்ததோடு, என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டும் அவர்களை அதற்கு முன்னதாகவே தீர்த்து கட்ட வேண்டும் என்று ஆவேசத்துடன் கூறினார்.

இதனையடுத்து ரமேஷ், சுந்தர், ரமேஷின் அண்ணன் ராமச்சந்திரன், சுந்தரின் நண்பர் நிஷாந்த் ஆகியோர் அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதே சமயத்தில், அஜித்குமார், அர்ஜூன் ஆகிய 2 பேரும் ரமேசுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, எங்கு இருக்கிறாய் என்று கேட்டு மிரட்டியுள்ளனர். இதுதான் அவர்களை கொலை செய்ய சரியான சந்தர்ப்பம் என்று ரமேஷ் தரப்பினர் முடிவு செய்தனர்.

பின்னர், என்.ஜி.ஓ. காலனி பகுதியில் நான் மட்டும் தான் நிற்கிறேன், தைரியம் இருந்தால் என்னிடம் வந்து மோதி பார் என்று ரமேஷ் சவால் விட்டுள்ளார். உடனே அஜித்குமாரும், அர்ஜூனும் ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். ரமேஷ் மட்டும் தான் அங்கு நிற்கிறான் என்று நினைத்து சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் அங்கு ரமேஷ் சிலருடன் கும்பலாக மோட்டார் சைக்கிள்களில் நின்றார். கொலைக்கான திட்டத்துடன் ஏற்கனவே தயாராக இருந்த ரமேஷ் தரப்பினர் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அவர்களை விரட்டினர். செய்வதறியாது திகைத்த 2 பேரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பிக்க முயன்றனர்.

ஆனால் ரமேஷ் தரப்பினர் அவர்களை விரட்டி சுற்றி வளைத்து ஆயுதங்களால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். வெறிச்செயலில் ஈடுபட்ட ரமேஷ் தரப்பினர் அங்கிருந்து தப்பி விட்டனர். அதே சமயத்தில், தப்பிக்கும் முயற்சியில் ஒரு மோட்டார் சைக்கிளை கொலை நடந்த இடத்தில் விட்டு சென்று விட்டனர். இதுவே, போலீஸ் விசாரணைக்கு முக்கிய தடயமாகவும் மாறியது. இரட்டைக்கொலையை அரங்கேற்றிய பிறகு ரமேஷின் வீட்டில் ஆயுதங்களை போட்டு விட்டு அனைவரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் ரமேசும், சுந்தரும் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

மேற்கண்ட தகவலை ரமேசும், சுந்தரும் வாக்குமூலமாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவான ராமச்சந்திரன், நிஷாந்த் ஆகிய 2 பேரையும் பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com