பூந்தமல்லியில் இருவேறு சம்பவம்: வங்கியில் பணம் எடுத்து வந்த 2 பேரிடம் ரூ.3 லட்சம் திருட்டு

பூந்தமல்லியில் வங்கியில் பணம் எடுத்து வந்த 2 பேரிடம் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர். மொபட்டின் இருக்கைக்கு அடியில் வைத்து இருந்த பணத்தை நைசாக திருடிச்சென்று உள்ளனர்.
பூந்தமல்லியில் இருவேறு சம்பவம்: வங்கியில் பணம் எடுத்து வந்த 2 பேரிடம் ரூ.3 லட்சம் திருட்டு
Published on

பூந்தமல்லி,

பூந்தமல்லி சுமித்ரா நகரைச் சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 53). இவர், நேற்று முன்தினம் மாலை பூந்தமல்லி டிரங்க் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் இருந்து ரூ.3 லட்சத்தை எடுத்தார். அதில் ரூ.1 லட்சத்தை தனியாக ஒரு பையிலும், ரூ.2 லட்சத்தை மற்றொரு பையிலும் பிரித்து வைத்து அவற்றை மொபட்டின் இருக்கைக்கு அடியில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றார்.

வெளியூரில் வசிக்கும் அவருடைய மகனுக்கு ரூ.3 லட்சம் அனுப்ப வேண்டியது இருந்ததால், வீட்டில் இருந்து மேலும் ரூ.50 ஆயிரத்தை எடுத்து வர வீட்டின் முன்புறம் மொபட்டை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.

பின்னர் வெளியே வந்தபோது மொபட்டின் இருக்கைக்கு அடியில் வைத்து இருந்த ரூ.2 லட்சத்தை மட்டும் மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மற்றொரு பையில் வைத்து இருந்த ரூ.1 லட்சம் மர்மநபர்களிடம் இருந்து தப்பியது.

பூந்தமல்லியை சேர்ந்தவர் தேவராஜ்(51). அதே பகுதியில் ஆட்டோ உதிரிபாகங்கள் கடை நடத்தி வருகிறார். இவருடைய நண்பருக்கு பணம் கொடுக்க வேண்டியது இருந்ததால் நேற்று முன்தினம் மாலை பூந்தமல்லி டிரங்க் ரோட்டில் உள்ள அரசு வங்கி ஒன்றில் இருந்து ரூ.1 லட்சத்தை எடுத்து, அதை மொபட்டின் இருக்கைக்கு அடியில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றார்.

செல்லும் வழியில் அரசு மருத்துவமனை அருகே உள்ள ஒரு மளிகை கடை முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினார். பின்னர் மொபட்டை எடுக்க முயன்றபோது, இருக்கைக்கு அடியில் வைத்து இருந்த ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த 2 சம்பவங்களிலும் ஒரே நபர்கள்தான் ஈடுபட்டார்களா? தீனதயாளன், தேவராஜ் இருவரும் வங்கியில் இருந்து பணம் எடுத்து வருவதை நோட்டமிட்ட அவர்கள், 2 பேரையும் பின்தொடர்ந்து சென்று மொபட்டின் இருக்கைக்கு அடியில் வைத்து இருந்த பணத்தை திருடிச்சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com