நெல்லையில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது

நெல்லையில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது.
நெல்லையில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது
Published on

நெல்லை,

நெல்லை சந்திப்பு தெற்கு பாலபாக்யா நகரை சேர்ந்தவர் வேலாயுதம், பட்டய கணக்காளர். இவருடைய மனைவி லதா என்ற சரவணலதா (வயது 43). கடந்த 13-ந் தேதி லதா வீட்டில் இருந்து கணினி முன்பு அமர்ந்திருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் கதவு திறந்து கிடந்த அந்த வீட்டிற்குள் நுழைந்தான். வீட்டிற்குள் இருந்த லதாவை மிரட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் எடைகொண்ட 2 தங்க சங்கிலிகளை பறித்து விட்டு, அங்கிருந்து வேகமாக வெளியே தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இதையடுத்து அந்த பகுதி மக்கள், தப்பி ஓடிய மர்ம நபரை துரத்திச் சென்றனர். ஆனால் அந்த நபர் அங்குள்ள தண்டவாளத்தை கடந்து, அங்கு தயார் நிலையில் தனது கூட்டாளி நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி வேகமாக தப்பிச்சென்றுவிட்டார்.

கொள்ளையர்கள் உருவப்படம்

இதுகுறித்து தச்சநல்லூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதேநேரத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் 2 பேரது உருவப்படங்கள் பதிவாகி இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்து சேகரித்தனர். அதனைக் கொண்டு மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மர்ம நபர்கள் 2 பேரும் தூத்துக்குடியை சேர்ந்த செல்வம், விஜய் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று செல்வம், விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 பவுன் நகைகளும் மீட்கப்பட்டன.

இவர்கள் 2 பேர் மீதும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளன. அவை தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com