திட்டக்குடி அருகே விபத்து முன்னால் சென்ற லாரி மீது பஸ் மோதல் கண்டக்டர் உள்பட 2 பேர் உடல் நசுங்கி சாவு

திட்டக்குடி அருகே முன்னால் சென்ற லாரி மீது பஸ் மோதிய விபத்தில் கண்டக்டர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 11 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
திட்டக்குடி அருகே விபத்து முன்னால் சென்ற லாரி மீது பஸ் மோதல் கண்டக்டர் உள்பட 2 பேர் உடல் நசுங்கி சாவு
Published on

திட்டக்குடி,

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று திருச்சி நோக்கி புறப்பட்டது. இந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராயப்பாளையத்தை சேர்ந்த சின்னசாமி மகன் அரசுகாரன் (வயது 45) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக செங்கல்பட்டை சேர்ந்த மூர்த்தி(45) என்பவர் இருந்தார்.

இந்த நிலையில், நேற்று அதி காலை 5.30 மணி அளவில் அந்த பஸ் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வந்து கொண்டிருந்தது. வெங்கனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தறிகெட்டு தாறுமாறாக ஓட தொடங்கியது. இதில் அந்த பஸ் கண் இமைக்கும் நேரத்தில் முன்னால் சென்ற மணல் லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் லாரி மீது மோதிய வேகத்தில் பஸ்சின் ஒரு பகுதி முழுவதும் பலத்த சேதம் அடைந்தது. விபத்தில் கண்டக்டர் மூர்த்தி (45) மற்றும் சென்னையை சேர்ந்த சுப்பையா மகன் ராஜா(40) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பயணிகள் தர்மராஜ்(50), ரங்கநாதன்(32) மாலினி(25), முகமது இப்ராகிம்(37) பழனிவேல்(32), ராஜேந்திரன்(29), பிரபு(18), பெரியசாமி(20), கணேசன் (23), பாரதி(36), விஜயசுந்தர் (30) ஆகிய 11 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும், அவர்கள் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் படுகாயம் அடைந்த தர்மராஜ் உள்ளிட்ட 11 பேரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையில் விபத்தில் பலியான மூர்த்தி, ராஜா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து விபத்துக்குள்ளான அரசு பஸ் மற்றும் லாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com