திண்டுக்கல் அருகே வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலி

திண்டுக்கல் அருகே நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர்.
திண்டுக்கல் அருகே வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலி
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள என்.பஞ்சம்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 45). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கட்டிட வேலைக்காக சாணார்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்-நத்தம் சாலையில் ஆர்.எம்.டி.சி. நகர் அருகே அவர் வந்தபோது, எதிரே தவசிமடையை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கெண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பால்பாண்டி படுகாயம் அடைந்தார். ஜெயச்சந்திரன் காயமின்றி தப்பினார். இதையடுத்து படுகாயம் அடைந்த பால்பாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பால்பாண்டி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் திண்டுக்கல் அருகே உள்ள பித்தளைபட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி சித்ரா (55). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் எதிரே விளையாடி கொண்டிருந்த பேரக்குழந்தையை அழைத்து வருவதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மினி வேன் ஒன்று சித்ரா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com