நிலக்கோட்டை அருகே வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை

நிலக்கோட்டை அருகே வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
நிலக்கோட்டை அருகே வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள நாட்டார்பட்டியை சேர்ந்த பெரியகருப்பன் மகன் சரத்குமார் (வயது 26). இவர், திருப்பூரில் கூலி வேலை செய்து வந்தார். சட்டமன்ற தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக சரத்குமார் சொந்த ஊருக்கு வந்தார். ஆனால் அதன்பிறகு அவர் திருப்பூருக்கு செல்லவில்லை. மேலும் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனை அவரது தாய் ராணி கண்டித்தார். இதனால் மனமுடைந்த சரத்குமார் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரத்குமார் இறந்தார். இந்த தற்கொலை குறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் நிலக்கோட்டை அருகே உள்ள கொக்குபட்டியை சேர்ந்த சுந்தரம் (75) என்பவர் தீராத வயிற்றுவலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் விரக்தியடைந்த சுந்தரம் நேற்று முன்தினம் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com