

தேனி:
கர்நாடக மாநிலம் பிடதி மாவட்டம், ராம்நகரை சேர்ந்த ஆஞ்சினப்பா மகன் சசிக்குமார் (வயது 23). இவரும் இவருடைய அண்ணன் திலீப்குமார் (25) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிடம் தொழில் செய்வதற்காக தேனிக்கு வந்தனர்.
சசிக்குமார் பழனிசெட்டிபட்டி தந்தை பெரியார் தெருவிலும், திலீப்குமார் தேனி பத்ரகாளியம்மன் கோவில் தெருவிலும் வசித்து வந்தனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் திலீப்குமார் தனது தம்பியை பார்க்க வந்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சசிக்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் திலீப்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாழிசைசெல்வன் வழக்குப்பதிவு செய்து, சசிக்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் தேவதானப்பட்டி அருகே உள்ள நல்ல கருப்பன்பட்டியை சேர்ந்தவர் கண்ணையன் (வயது 70). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கண்ணையன் விஷம் குடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணையன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.