

வேலூர்
சரக்கு ஆடடோ- மோட்டார் சைக்கிள் மோதல்
வேலூர் பலவன்சாத்துகுப்பம் கானாற்றுக்கரைதெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 26), கட்டிட மேஸ்திரி. இவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த தச்சு தொழிலாளி ரவிச்சந்திரன் (43) ஆகியோர் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் வேலூர் நோக்கி வந்தனர். மோட்டார் சைக்கிளை ரவிசங்கர் ஓட்டினார். ரவிச்சந்திரன் பின்னால் அமர்ந்திருந்தார்.
தொரப்பாடி எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
2 பேர் பலி
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரவிசங்கர் சம்பவ இடத்தில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் படுகாயம் அடைந்த ரவிச்சந்திரனை மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் ரவிச்சந்திரன் சிறிதுநேரத்தில் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து பற்றி தகவலறிந்த பாகாயம் போலீசார் அங்கு சென்று உயிரிழந்த ரவிசங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சரக்கு ஆட்டோ விபத்துக்கு பின்னர் சம்பவ இடத்தில் நிற்காமல் சென்றுவிட்டது. எனவே அந்த ஆட்டோவை கண்டுபிடிக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.