ஓசூரில் பள்ளியில் கம்ப்யூட்டர்களை திருடிய 2 பேர் கைது

ஓசூரில் பள்ளியில் 5 கம்ப்யூட்டர்களை திருடியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூரில் பள்ளியில் கம்ப்யூட்டர்களை திருடிய 2 பேர் கைது
Published on

ஓசூர்,

ஓசூரில் பாகலூர் சாலையில் நல்லூரில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 29-ந் தேதி இந்த பள்ளியில் இருந்த 5 கம்ப்யூட்டர்கள் திருட்டு போனது. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக பள்ளியின் மேலாளர் பானு பிரகாஷ் ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சரண்யா ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அதில் பள்ளியில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்த குறளரசன் (வயது 23) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவரும், அவருடைய நண்பர் ரவி (25) என்பவரும் சேர்ந்து பள்ளியில் இருந்த 5 கம்ப்யூட்டர்களை திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான குறளரசன், ரவி ஆகிய 2 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஜெகதாப் பக்கமுள்ள பாலனூரைச் சேர்ந்தவர்கள்.

பள்ளியில் கட்டிட வேலை செய்து வந்த இவர்கள் 2 பேரும் பள்ளியின் ஆய்வக அறை கதவை உடைத்து உள்ளே நுழைந்து அதில் இருந்த 5 கம்ப்யூட்டர்களை திருடியது விசாரணையில் தெரிய வந்தது. கைதான 2 பேரிடம் இருந்து 5 கம்ப்யூட்டர்களும் மீட்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஓசூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com