

உடுமலை
உடுமலை கிராமப்புறபகுதிகளில் காய்கறிகள் விற்பனை அமோகமாக நடந்தது.
காய்கறி கடைகள்
உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை உடுமலை நகரில் உள்ள உழவர்சந்தைக்கு அதிகாலையிலேயே கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். உடுமலை உழவர் சந்தைக்கு காய்கறிகளை வாங்குவதற்கு, பெரும்பாலும் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களே வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியதும் நகராட்சிக்குட்பட்ட ராமசாமி நகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஆங்காங்கு சாலையோரம் காய்கறிகடைகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
ஊராட்சி பகுதி
இதுதவிர கணக்கம்பாளையம், போடிபட்டி, குரல்குட்டை உள்ளிட்ட பல ஊராட்சி பகுதிகளிலும் சாலையோரம் காய்கறி கடைகள் உள்ளன. குமரலிங்கம்,கொழுமம் சாலையில் கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.வி.புரம் உள்ளிட்ட பல ஊராட்சி பகுதிகளில் சிலர் தங்களது வீட்டு வாசலிலேயே காய்கறி விற்பனைகடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் கிராமப்புற பொதுமக்கள் தங்கள் வீடு அருகில் உள்ள கடைகளிலேயே காய்கறிகளை வாங்கிக்கொள்கின்றனர். மளிகை பொருட்களை அதிகமாக வாங்கும் பொதுமக்கள் எப்போதும் போன்று உடுமலை நகர பகுதிக்கு வந்து மளிகை பொருட்களை வாங்கிச்செல்கின்றனர்.