படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சுப்பிரமணியன் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சுப்பிரமணியன் தகவல்
Published on

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவை தொடர்ந்து புதுப்பித்து 31.3.2018 அன்றைய நிலையில் 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனுள்ள இளைஞர்களுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 30.6.18 அன்றைய நிலையில் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

மேலும் உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் வருகிற 31-ந்தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் விழுப்புரத்தில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com