விலையில்லா மடிக்கணினி வழங்க வலியுறுத்தி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் கைது

தேனியில் விலையில்லா மடிக்கணினி வழங்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 31 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் தர, தரவென இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விலையில்லா மடிக்கணினி வழங்க வலியுறுத்தி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் கைது
Published on

தேனி,

இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமையில், கல்லூரி மாணவ, மாணவிகள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு அங்கு வந்தனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் கடந்த 2017-18, 2018-2019-ம் கல்வி ஆண்டுகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர இதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் அவர்கள், கலெக்டர் பல்லவி பல்தேவிடம் மனு அளிக்க சென்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் திரும்பி வந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் தங்களிடம் மனு வாங்கவில்லை என்றும், மாணவர்களின் குறைகளை நேரில் சந்தித்து கேட்காததால் போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யப் போவதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தியதால், குண்டுக்கட்டாக தூக்கியும், தர தரவென இழுத்து சென்றும் மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து மாவட்ட செயலாளர் நாகராஜ் கூறுகையில், கலெக்டரிடம் மனு அளிக்க காத்திருந்தோம். நேர்முக எழுத்தர் எங்களிடம் மனு அளிக்க வந்த காரணம் கேட்டார். பின்னர் மீண்டும் கலெக்டரை சந்தித்து வந்தவர், இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலரிடம் யாருக்கு எல்லாம் மடிக்கணினி வழங்கவில்லை என்ற பட்டியல் கேட்டுள்ளதாகவும், விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என்றும் கூறினார். ஆனால், மனுவை வாங்கவில்லை. இதனால், மீண்டும் போராட்டம் நடத்தினோம் என்றார்.

இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கைதான அனைவரும் தேனியில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com