6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முற்றுகை

ஊத்துக்கோட்டை அருகே 6 வழி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், இரவில் அளவு கல் நட்டதை கண்டித்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முற்றுகை
Published on

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து, ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3 ஆயிரத்து 200 கோடி செலவில், 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சாலை கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், தும்பாக்கம், தொளவேடு, பாலவாக்கம், பிச்சாட்டூர் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது.

சாலை அமைக்க நிலம் அளவிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய விளை நிலங்கள், நூற்றுக்கணக்கான வீடுகள் ஆகியவை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னங்காரணை, ஆலப்பாக்கம் கிராமங்களில் அதிகாரிகள் திட்டத்தின்படி அளவு கற்களை நட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை இதை பார்த்த பொதுமக்கள், வாகனங்களில் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த திருவள்ளூர் மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் கருப்பையா, தாசில்தார்கள் பிரீத்தி, குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர், அளவு கற்கலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில், அவர்கள் கலைந்து சென்றனர். தங்கள் கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைத்தால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com