

தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த தாதம்பேட்டையில் வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் கோவில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் பெருமாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் நான்கு மாட வீதிகளில் வீதிஉலா நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்தி கோஷங்களை எழுப்பியும், தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்தும் பெருமாளை வழிபட்டனர். இதில் தா.பழூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று தேரோட்டம்
இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.