

வாழப்பாடி,
வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று காலை வந்த மாவட்ட கலெக்டர் ரோகிணி, ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அரசு திட்டங்கள் குறித்து கலந்தாய்வு நடத்தினார். பின்னர் வாழப்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று பொது வினியோக கடையை ஆய்வு செய்தார்.
இதையடுத்து வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர், வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் மற்றும் பிரசவ வார்டு பகுதிகளை ஆய்வு செய்தார். வெளிநோயாளிகள் பதிவேடுகளை பெயர், முகவரியுடன் பராமரிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது வாழப்பாடி தாசில்தார் பொன்னுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலினி, செந்தில்குமார், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராதிகா மற்றும் துறை அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.