பெரியபாளையத்தில் மின்கம்பத்தில் வேன் மோதல்; 11 பெண்கள் படுகாயம்

பெரியபாளையத்தில் உள்ள வடமதுரை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 11 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
பெரியபாளையத்தில் மின்கம்பத்தில் வேன் மோதல்; 11 பெண்கள் படுகாயம்
Published on

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் மெய்யூர், வெங்கல், பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூந்தமல்லியில் இயங்கி வரும் தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு பெண் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்றது. அந்த வேனை மெய்யூர் பகுதியைச் சேர்ந்த இளையராஜா (வயது 23) என்பவர் ஓட்டிச் சென்றார். திருநின்றவூர் பெரியபாளையம் நெடுஞ்சாலையில் வடமதுரை சர்ச் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென்று தாறுமாறாக ஓடி சாலையோர மின் கம்பத்தில் மோதியது.

11 பெண்கள் காயம்

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 11 பெண் ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் வேறு ஒரு வாகனத்தில் படுகாயம் அடைந்த பெண்களை ஏற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com