கும்மிடிப்பூண்டி அருகே வேன் டயர் வெடித்து விபத்து - டிரைவர், கிளனர் உயிர் தப்பினர்

கும்மிடிப்பூண்டி அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மினி லோடு வேனின் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஊறுகாய் மூட்டைகள் சிதறின.
கும்மிடிப்பூண்டி அருகே வேன் டயர் வெடித்து விபத்து - டிரைவர், கிளனர் உயிர் தப்பினர்
Published on

கும்மிடிப்பூண்டி,

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் குமார் (வயது 37). இவர் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து 3 டன் எடை கொண்ட மாங்காய் ஊறுகாய் மூட்டைகளை ஒரு மினி லோடு வேனில் ஏற்றிக்கொண்டு சென்னை செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த வேனில் கொருக்குபேட்டையை சேர்ந்த மோகன் (40) என்பவர் கிளனராக உடன் வந்து கொண்டிருந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த தச்சூர் மேம்பாலத்தின் மீது வேன் சென்ற நிலையில், அதன் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்தது.இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த மினிவேன், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த டிரைவர் குமார் மற்றும் கிளனர் மோகன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதற்கிடையே வேனில் இருந்த 3 டன் எடை கொண்ட ஊறுகாய் மூட்டைகள் அனைத்தும் நாலாபுறமும் சிதறியதால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதை அறிந்த கவரைப்பேட்டை போலீசார் அவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com