வானவில் : புல்லட் வயது 117

சாலைகளில் ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் ஓடினாலும், ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைக்கும் ‘பைக்’ என்றால் அது ‘ராயல் என்பீல்டு’ எனப்படும் ‘புல்லட்’ தான்.
வானவில் : புல்லட் வயது 117
Published on

அனைவரையும் ஈர்ப்பது அதன் கம்பீரமான தோற்றமும், டுப்...டுப்... என்ற அதிர வைக்கும் ஒரே சீரான சத்தமும் தான்.

ஒரு காலத்தில் ராணுவத்தினரும், காவல்துறையினரும் தங்கள் ரோந்துப் பணிக்காக புல்லட் பயன்படுத்தினார்கள். பின்னர் பொதுமக்களின் கவனம் புல்லட் பக்கம் திரும்பியது.

அந்தக்காலத்தில், தமிழ்நாட்டு கிராமத்து மைனர்களின் தேர்வாக புல்லட் இருந்தது. மல்லு வேட்டியும், சில்க் ஜிப்பாவும் அணிந்து கொண்டு, புலி நகம் பதித்த தங்கச்சங்கிலி மார்பில் புரள, கம்பீரமாக புல்லட்டில் பயணிப்பது மைனர்களின் ஸ்டைல் ஆக இருந்தது.

காலங்கள் மாறும்போது காட்சிகள் மாறும் என்பதற்கு ஏற்ப, இன்று ஐ.டி. துறையினர் மட்டுமின்றி பெரும்பாலான இளைஞர்களின் தேர்வாக புல்லட் மாறிவிட்டது. இதற்கு ஏற்ப பல நவீன வசதிகளுடன் புல்லட் பைக்குகள் களம் இறங்கியுள்ளன.

புல்லட் பைக் வைத்திருப்பது கம்பீரத்தின் அடையாளம் என இன்றைய இளைஞர்கள் கருதுகிறார்கள்.

இந்திய சாலைகளில் கம்பீரமாக வலம் வரும் புல்லட்டுக்கு வயது 117 என்றால் நம்ப முடிகிறதா?. புல்லட்டின் வரலாற்றை கொஞ்சம் புரட்டிப்பார்ப்போம் வாருங்கள்...

இங்கிலாந்தில் ரெட்டிக் என்ற இடத்தில் 1893-ம் ஆண்டு என்பீல்டு சைக்கிள் கம்பெனி என்ற பெயரில் சைக்கிள் உதிரிப்பாகங்கள், தையல் எந்திர ஊசிகள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார் ஜார்ஜ் டவுன்சன்ட் என்பவர். நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்ட இந்த நிறுவனத்தை ஆர்.டபிள்யூ. சுமித் மற்றும் ஆல்பர்ட் எட்டி ஆகியோர் வாங்கினார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து இங்கிலாந்தில் என்பீல்ட் என்ற இடத்தில் ராயல் ஸ்மால் ஆர்ம்ஸ் பேக்டரி என்ற பெயரில் ஆயுதங்கள் தயாரித்து விற்கும் நிறுவனம் நடத்தி வந்தார்கள்.

இவர்கள், என்பீல்டு சைக்கிள் கம்பெனி என்ற பெயரை ராயல் என்பீல்டு கம்பெனி என்று மாற்றினார்கள். இவர்கள் துப்பாக்கி குண்டு (புல்லட்) தயாரிப்பில் புகழ்பெற்று இருந்ததால் தங்களது முதல் மோட்டார் சைக்கிளுக்கு புல்லட் என்று பெயர் சூட்டினார்கள். 1901-ம் ஆண்டு புல்லட் தயாரிப்பு தொடங்கப்பட்டது. இப்போது 117 வயதைக்கடந்து, உலக சாலைகளில் கம்பீரமாக புல்லட் வலம் வருகிறது.

1949-ல் இந்தியாவில் புல்லட் விற்பனையைத் தொடங்கிய பெருமை வி.ஏ.எல். சுந்தரத்தையே சாரும். 1955-ல் திருவொற்றியூரில் இந்தியன் மெட்ராஸ் மோட்டார்ஸ் என்ற பெயரில் புல்லட் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. 1993-ம் ஆண்டில் ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனம் இந்நிறுவனத்தை வாங்கியது. தற்போது இளைஞர்களின் விருப்பத்திற்கேற்ப அழகிய வண்ணத்தில், பல்வேறு வசதிகளுடன், புல்லட் பைக்குகள் தயாராகிறது.

ஒருகாலத்தில் புல்லட் வாங்க வேண்டும் என்றால் பணம் செலுத்திவிட்டு சிலமாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்த காத்திருப்பு காலத்தை வெகுவாகக் குறைத்ததில் சென்னை ஒரகடம் ஆலைக்கு முக்கிய பங்குண்டு.

இந்த நவீன ஆலையின் உற்பத்தித்திறன் காரணமாக புல்லட் பைக்குகளை காத்திருப்பு காலம் இன்றி இப்போது உடனே வாங்க முடிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com